இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை "அல்சர் "

அல்சர் பற்றிய தகவல்களும் அதை சரி செய்யும் இயற்கை வைத்திய முறைகளும் :-
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது “அல்சர்”. ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். அல்சர் என்பது என்ன? தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம். இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ்
படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். அல்சர் ஏற்படுவதற்கான காரணங்கள் :- காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு
வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது. ஸ்டீராய்டு
மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது. உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன. தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும்
காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குக் காரணம், நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால் இந்த அமிலம்
இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.
அல்சருக்கான அறிகுறிகள் :-
இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும், புண் உள்ள இடத்தில் அமிலம்படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவைச் சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம் புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது. சிகிச்சை என்ன? இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை,
மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைச் சிகிச்சை
பரிந்துரைக்கப்படும்.
1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது.
வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள்
வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.
5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால்
வயிற்றுப்புண்கள் குணமாகும். 6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க
வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது)
அல்சருக்கு நல்லது. 8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து
கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும்
தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும். 11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை
வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். 12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள்,
சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும். 13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.
--Google plus Tamil community
Share on Google Plus

About Raghu Raja

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment